வண்டலூர் பூங்காவில் மதம் பிடித்த 2 யானைகள் இடமாற்றம்

வண்டலூர் பூங்காவில் மதம் பிடித்த 2 யானைகள் ஆனைமலை, முதுமலை முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வண்டலூர் பூங்காவில் மதம் பிடித்த 2 யானைகள் இடமாற்றம்
Published on

வண்டலூர்,

கடந்த 4.1.2010அன்று கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இருந்து தாயால் கைவிடப்பட்ட ஒரு ஆண் யானைக்குட்டியை வனத்துறை அதிகாரிகள் மீட்டெடுத்து சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அந்த யானைக்குட்டிக்கு பூங்கா நிர்வாகம் உரிகம் என்று பெயர் வைத்து பாராமரித்து வந்தது.

அதே போல கடந்த 20.3.2010 அன்று ஜவலகிரி வனச்சரகம் கிருஷ்ணகிரியில் இருந்து ஆண் யானைக்குட்டி ஒன்று மீட்கப்பட்டு வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த யானைக்குட்டிக்கு பூங்கா ஊழியர்கள் கிரி என்று பெயர் வைத்து பராமரித்து வந்தனர்.

பொதுவாக ஆண் யானைகள் 11 வயது முதல் 14 வயதுக்குள் முதிர்ச்சியடையும் போது அவற்றுக்கு மதம் பிடித்தலுக்கான அறிகுறிகள் தென்படும். தற்போது உரிகத்திற்கு 9 வயதும், கிரிக்கு 8 வயதும் ஆன நிலையில் மதம் பிடித்தலுக்கான அறிகுறிகள் கடந்த சில நாட்களாக தென்பட்டன.

எனவே பூங்காவின் பாதுகாப்பு காரணங்களுக்காக வனவிலங்கு டாக்டர்களின் அறிவுரைபடி அந்த யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

அதன்படி உரிகம் என்ற ஆண் யானை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வரகலியார் யானைகள் முகாமிற்கும், கிரி என்ற ஆண் யானை முதுமலை யானைகள் முகாமிற்கும் நேற்றுமுன்தினம் யானைப்பணியாளர்களுடன் உரிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ குழுவுடன் அனுப்பி வைக்கப்பட்டு, நேற்று காலை கொண்டு சேர்க்கப்பட்டன.

தற்போது வண்டலூர் பூங்காவில் 7 வயதுள்ள அசோக் என்ற ஆண் யானையும், 2 வயதான பிரக்குருதி என்ற பெண் யானையும் உள்ளன. மேற்கண்ட தகவல் வண்டலூர் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com