வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் திருவிழா காஞ்சீபுரத்திற்கு காவிரி நீரை கொண்டு வர ஆலோசனை

வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் திருவிழாவையொட்டி காஞ்சீபுரத்திற்கு காவிரி நீரை கொண்டுவர ஆலோசனை நடப்பதாக நகராட்சி ஆணையர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் திருவிழா காஞ்சீபுரத்திற்கு காவிரி நீரை கொண்டு வர ஆலோசனை
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில், அனந்தசரஸ் குளத்தில் வீற்றுள்ள அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வெளியே எடுக்கும் அத்திவரதர் விழா நடக்கிறது. வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் 48 நாட்கள் பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலிக்கவுள்ளார். 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் அளிக்க உள்ளார். இவரை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதி மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் கூடும் இடங்கள், வாகன நிறுத்தங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணியை, நகராட்சி நிர்வாகம் கவனிக்கிறது.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அரக்கோணத்திற்கு வரும் காவிரி நீரை, திருப்பாற்கடல் வழியாக காஞ்சீபுரத்திற்கு கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன் கூறியதாவது:-
தர்மபுரி கூட்டு குடிநீர் திட்டத்தில், அரக்கோணம் வரை காவிரி நீர் வருகிறது. அதில் இருந்து, திருப்பாற்கடல் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்துடன் இணைத்து, அத்திவரதர் வைபவத்திற்காக, காஞ்சீபுரத்திற்கு குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீருக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம், அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. அரசு ஒப்புதல் கிடைத்த பின், பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com