

வேலூர்,
வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே அனைத்து மகளிர் போலீஸ்நிலையம் இயங்கிவருகிறது. பெண்கள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் குறித்த வழக்குகள் குறித்து இங்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த போலீஸ் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், எழுத்தர், போலீசார், கோர்ட்டுபணிக்கு செல்பவர் என 10-க்கும் மேற்பட்டவர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு எழுத்தர், ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என மொத்தம் 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
சத்துவாச்சாரி, வேலூர் வடக்கு, தெற்கு, பாகாயம், தாலுகா, அரியூர், விரிஞ்சிபுரம், வேப்பங்குப்பம், அணைக்கட்டு, பள்ளிகொண்டா ஆகிய 10 போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் பெண்கள், குழந்தைகள், பாலியல் சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தும் இங்குதான் விசாரிக்கப்படுகிறது.
50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ்நிலைய எல்லைக்குள் வருவதாக கூறப்படுகிறது. இந்த கிராமங்களில் இருந்து ஒருநாளைக்கு சராசரியாக 7 புகார் மனுக்கள் வருவதாக கூறப்படுகிறது. ஆனால் புகார் மனுக்களை விசாரிக்க போலீசார் இல்லை.
இதனால் புகார்மனு குறித்து கிராமங்களுக்கு நேரில் சென்றுவிசாரிக்க முடியவில்லை. அதேபோன்று போலீஸ் நிலையங்களிலும் விசாரிக்க முடியாதநிலை உள்ளது. இதன்காரணமாக புகார் மனுக்கள் தேங்கி உள்ளது. எனவே கூடுல் போலீசார் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.