வெவ்வேறு இடங்களில் துணிகரம்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீடு– மளிகை கடையில் திருட்டு

தஞ்சை அருகே வெவ்வேறு இடங்களில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீடு மற்றும் மளிகை கடையில் திருட்டு நடந்துள்ளது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வெவ்வேறு இடங்களில் துணிகரம்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீடு– மளிகை கடையில் திருட்டு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள போஸ்டல் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 78). இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மகள் சென்னையில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பரசுராமன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக சென்றார்.

இந்நிலையில் நேற்று வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அருகில் வசிப்பவர்கள் பரசுராமனுக்கும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

நகை வெள்ளிப்பொருட்கள்


மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் பரசுராமனும் தஞ்சைக்கு வந்தார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த வெள்ளிப்பொருட்கள், நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து பரசுராமன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தஞ்சையை அடுத்த திட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் கடையை திறந்து பார்த்த போது அங்கு இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போன் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் ரெங்கநாதன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com