விழுப்புரத்தில் துணிகரம்: டாக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.
விழுப்புரத்தில் துணிகரம்: டாக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் கே.கே.நகர் அப்துல்கலாம் தெருவை சேர்ந்தவர் ராமசேஷூ (வயது 65). டாக்டரான இவர் விழுப்புரம் கே.கே.சாலையில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருடைய மகன், மகள் பெங்களூருவில் வசித்துவரும் நிலையில் ராமசேஷூ தனது மனைவி லட்சுமியுடன் விழுப்புரத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராமசேஷூ தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். வீட்டை பார்த்துக்கொள்வதற்காக அவர், கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த தனது உறவினர் ஒருவரிடம் வீட்டு சாவியை கொடுத்திருந்தார். இதனால் அவர், அவ்வப்போது ராமசேஷூ வீட்டிற்கு வந்து பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்துள்ளார். நேற்று காலை அவர், ராமசேஷூ வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே இதுபற்றி அவர், ராமசேஷூவிற்கு தகவல் தெரிவித்தார்.

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், விழுப்புரத்தில் உள்ள தனது நண்பரான செல்வராஜ் என்பவரை தொடர்புகொண்டு நடந்த சம்பவம் பற்றி கூறி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறினார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வீட்டில் இருந்த மர பீரோ மற்றும் 2 இரும்பு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தது. ஆனால் 3 பீரோக்களிலும் நகை, பணம் எதுவும் இல்லை. அதே சமயம் வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டிலின் கீழ்பகுதியில் தரையில் புதைக்கப்பட்ட லாக்கரை கண்டுபிடித்து, அதனை உடைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ராமசேஷூவை போலீசார், செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர், தனது வீட்டில் 60 பவுன் நகைகள் வைத்திருந்ததாக கூறினார். இதனடிப்படையில் 60 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி கைரேகை நிபுணர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள், கொள்ளை நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் மோப்ப நாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த மோப்ப நாய், கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி வீட்டின் பின்புற பகுதியிலுள்ள திருமண மண்டபத்தை கடந்து விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ள மெயின் ரோடு வழியாக சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. ராமசேஷூவின் வீடு, 2 வாரங்களாக பூட்டிக்கிடந்ததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோக்களை உடைத்துள்ளனர். ஆனால் அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால் வீடு முழுவதும் தேடிப்பார்த்தபோது கட்டிலின் கீழ் பகுதியில் தரையில் புதைக்கப்பட்ட லாக்கரை கண்டுபிடித்து அதனை உடைத்து அதிலிருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சமாகும்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தனியார் மருத்துவமனை டாக்டர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com