கடையநல்லூர் அருகே துணிகரம் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 33 பவுன் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கடையநல்லூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 33 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கடையநல்லூர் அருகே துணிகரம் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 33 பவுன் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
Published on

புளியங்குடி,

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி அருகே உள்ள புன்னையாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 52). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது முந்தல் என்ற பகுதியில் உள்ள கோவிலில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஆறுமுகம். இவர் கூட்டுறவு சொசைட்டியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள்.

நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் நாராயணன் வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி ஆறுமுகம் தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு கிருஷ்ணாபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கிவிட்டார்.

வேலை முடிந்து நேற்று காலை நாராயணன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 33 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசில் நாராயணன் புகார் செய்தார். அதன்பேரில் புளியங்குடி துணை சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com