

ஸ்ரீரங்கம்,
விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் நேற்று மதியம் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு இரவில் திருவானைக்காவல் வந்தார். உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் சீடர்கள் சார்பில் அவருக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவானைக்காவல் வடக்குஉள்வீதி காஞ்சி சங்கரமடத்தில் முகாமிட்டுள்ள அவர், இன்று முதல் தினமும் காலை 10.30 மணிக்கும், இரவு 7 மணியளவிலும் உலக நன்மைக்காக சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடத்துகிறார். வருகிற 20-ந் தேதி காலை சங்கராச்சாரியார் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு மங்களாசாசனம் எனப்படும் சிறப்பு வழிபாட்டுக்குச் செல்கிறார். அன்று மதியமும், 21-ந் தேதியும் வழக்கம் போல் திருவானைக்காவல் சங்கர மடத்தில் பூஜைகள் நடத்துகின்றார். வருகிற 22-ந் தேதி அவர் புதுக்கோட்டை மாவட்டம் இளையாத்தங்குடி செல்கிறார். அன்று இரவு அங்கு தங்கும் அவர் 23-ந் தேதி காஞ்சி மடம் 65-வது பட்டம் ஸ்ரீசுதர்சன மகாதேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அதிட்டான கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறார். 24-ந் தேதி இளையாத்தங்குடியில் சிறப்பு பூஜைகள் நடத்துகின்றார். பின்னர் 25-ந் தேதி காஞ்சீபுரம் திரும்புகிறார்.