விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

விபத்து புகாரை மாற்றி பதிந்ததாக கூறி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
Published on

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே எழாய் கிராமத்தை சேர்ந்தவர் கனிகண்ணன் மனைவி சுசி (வயது 53). அங்கன்வாடி பொறுப்பாளரான இவரும், இவருடைய மகன் கலைநம்பி(26), பேரக்குழந்தை கோபேஷ் (1) ஆகியோர் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் எழாய் கிராமத்தில் இருந்து திருக்கனூருக்கு புறப்பட்டனர்.

இளையாண்டிப்பட்டு என்ற இடத்தில் செல்லும்போது அங்குள்ள ஒரு வளைவில் முன்னால் சென்ற டிராக்டரை கலைநம்பி முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கிய சுசி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகன் கலைநம்பி, கோபேஷ் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் டிராக்டர் டிப்பர் மோதியதாக புகாரை மாற்றி பதிந்ததாக கூறி நேற்று காலை சுசியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்று முற்றுகையிட்டனர்.

உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சுப்பையா ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புகார் மனுவில் குறிப்பிட்டபடியே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மாற்றி வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று படித்து காண்பித்தனர். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com