

பாப்பாரப்பட்டி:
பென்னாகரம் வட்டம் பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியூர் கிராமத்தில் உள்ள காப்புக்காட்டில் இருந்து காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. மேலும் அந்த காட்டுயானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு பெரியூர், சக்கிலிநத்தம் மற்றும் சீலூத்துக்கொள்ளை உள்ளிட்ட கிராமங்களில் புகுந்த காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதனால் கிராமமக்கள் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். நேற்று காலை பெரியூர் கிராமத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்களை ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்வதை தடுக்கவில்லை என்று கூறி கிராமமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெரியூர் கிராமத்துக்கு வந்த 2 டவுன் பஸ்களையும் அவர்கள் சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலக்கோடு வனச்சரகர் செல்வம், பென்னாகரம் தாசில்தார் அசோக்குமார், பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.