

பென்னாகரம்,
பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராமமக்கள் நேற்று, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், ரேணுகா, ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், துணைத்தலைவர்அற்புதம் அன்பு ஆகியோர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கூத்தப்பாடியில் சாக்கடை கால்வாய் மூடிகள் அமைக்கவும், குடிநீர், தெருவிளக்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.