மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் - பண்ருட்டி அருகே பரபரப்பு

பண்ருட்டி அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் - பண்ருட்டி அருகே பரபரப்பு
Published on

புதுப்பேட்டை,

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ளது எனதிரிமங்கலம். இந்த கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி திறக்கப்பட்டது. இங்கிருந்து தினமும் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இந்த குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதன்காரணமாக அந்த குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மணல் குவாரி திறக்கப்பட்டு தினமும் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வை கண்டித்தும், பொதுமக்கள் சார்பில் 2 இடங்களில் பதாகை வைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அந்த பதாகையை அகற்றினர். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 40-க்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு, குவாரியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு வெளியே வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுகமுடிவு எதுவும் ஏற்படவில்லை.

இதையடுத்து மீண்டும் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com