

விழுப்புரம்,
மருத்துவ மாணவர்கள், முதுகலை பட்ட மேற்படிப்பிற்கு நெக்ஸ்ட் என்ற நீட் தேர்வை எழுதினால்தான் சேர முடியும் என தேசிய மருத்துவ ஆணையம் ஆணை பிறப்பித்து செயல்படுத்தி வருகிறது. இந்த ஆணைய மசோதாவை எதிர்த்தும், இத்தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் கடந்த 3 நாட்களாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தர்ணா போராட்டம், மனித சங்கிலி என பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் நேற்றும் 4-வது நாளாக இவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் எதிரே கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கார்த்திக், மயில்சாமி, மோகன்ராஜ், தினேஷ், மனோகரன், விக்னேஷ், கலைவாணி, கீதா உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், இவர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.