விருதுநகர் கனிமவளத்துறையினரை மிரட்டிய என்ஜினீயர் கைது

உதவி கலெக்டர் என்று கூறி, விருதுநகர் கனிமவளத்துறையினரை மிரட்டிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் கனிமவளத்துறையினரை மிரட்டிய என்ஜினீயர் கைது
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த திருவண்ணாமலையை சேர்ந்த சேதுராமன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளைக்கு விதியை மீறி மண் எடுத்துச்சென்ற 3 டிராக்டர் களை கனிம வளத்துறையினர் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்திருந்தனர்.

இந்த நிலையில் சேதுராமனின் மகன் சிவசுப்பிரமணியன் (வயது 28) விருதுநகரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்துக்கு சென்று, நான் திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி கலெக்டர் பயிற்சியில் உள்ளேன். எனது தந்தை நடத்தி வரும் செங்கல் சூளைக்கு தேவையான மண் ஏற்றி வந்த வண்டியினை கைப்பற்றியுள்ளார்கள். அந்த வண்டிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார்.

அவர் மீது சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து அவர் பணியாற்றியதாக கூறிய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது சிவசுப்பிரமணியன் என்ற பெயரில் எவருமே அந்த மாவட்டத்தில் உதவி கலெக்டர் பயிற்சியில் இல்லை என்ற விவரம் தெரியவந்தது.

அதனடிப்படையில், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் சிவசுப்பிரமணியனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடி வருவது தெரியவந்தது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com