

விருதுநகர்,
விருதுநகர் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர் (வயது 52). இவர் மூளிப்பட்டி அரண்மனை அருகே தீபாவளியையொட்டி சாலையோர துணி கடை போட்டு இருந்தார். இவரது கடைக்கு வந்து கொள்முதல் செய்த வாலிபர் ஒருவர் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்தார். அந்தநோட்டை பார்த்து சந்தேகம் அடைந்த அப்துல்காதர் வேறு ரூபாய் நோட்டை தரும்படி கேட்டார். இதனால் அந்த வாலிபருக்கும், அப்துல்காதருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து அவரை சோதனை செய்த போது அவரிடம் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு ஒன்று, ரூ.500 கள்ள நோட்டு-2, ரூ.200 கள்ள நோட்டு-1 ஆகியவை இருந்தது.
அவர் விருதுநகர் சூலக்கரை அருகில் உள்ள செவல்பட்டியை சேர்ந்த கோபிநாத் (வயது26) என தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் அவருடன் வந்த சூர்யா (27) என்பவரும் போலீசாரிடம் சிக்கினார். இவர்கள் இருவரும் செவல்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் தங்களுக்கு கள்ளநோட்டை கொடுத்ததாக தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் முருகன் (32) என்பவரையும் விசாரணைக்கு அழைத்து வந்தனர்.