நீர்வரத்து வினாடிக்கு 5,500 கனஅடியாக குறைந்தது: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் பரிசல்கள் இயக்கம்

நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்ததால் 4 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நேற்று பரிசல்கள் இயக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீர்வரத்து வினாடிக்கு 5,500 கனஅடியாக குறைந்தது: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் பரிசல்கள் இயக்கம்
Published on

பென்னாகரம்,

தமிழக- கர்நாடக எல்லைப்பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் மழையளவு குறைந்ததால், கடந்த 3 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. நேற்று பகலிலும் இதே அளவில் நீர் வரத்து நீடித்தது. ஆனால், மாலையில் நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 500 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. இதனால் அருவிகளில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டிய நிலை மாறி குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டியது.

நீர்வரத்து கணிசமாக குறைந்ததால் பரிசல்கள் இயக்க நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் மீண்டும் இயக்கப்பட்டன. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், ஒகேனக்கல் பரிசல் துறையில் இருந்து மாமரத்துகடவு வரை மட்டுமே பரிசல்கள் இயக்கப்பட்டன. அந்த பரிசல்களில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்து ஒகேனக்கல்லின் இயற்கை அழகை பார்த்து ரசித்தனர். ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் மெயின் அருவி, சினிபால்ஸ் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com