ஆழியாறு அணையில் இருந்து சமத்தூர் எலவக்கரை குளத்துக்கு தண்ணீர் திறப்பு

ஆழியாறு அணையில் இருந்து சமத்தூர் எலவக்கரை குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆழியாறு அணையில் இருந்து சமத்தூர் எலவக்கரை குளத்துக்கு தண்ணீர் திறப்பு
Published on

பொள்ளாச்சி

ஆழியாறு அணையில் இருந்து சமத்தூர் எலவக்கரை குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

எலவக்கரை குளம்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து புதிய, பழைய ஆயக்கட்டு மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்படுகின்றது.

இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு கடந்த 16-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சி கால்வாயின் கீழ் பாசன வசதி பெறும் எலவக்கரை குளத்துக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தண்ணீர் திறப்பு

இதை ஏற்று தமிழக அரசு அணையில் இருந்து குளத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் பொள்ளாச்சி கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் ஜெயக்குமார், மாணிக்க வேல், தொழில்நுட்ப உதவியாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சி கால்வாய் வழியாக சமத்தூரில் உள்ள எலவக்கரை குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வினாடிக்கு 61 கன அடி வீதம் 11 நாட்களுக்கு 57 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும்.

பாசன வசதி பெறும்

இதன் மூலம் சமத்தூர் கிராமங்களில் உள்ள 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் குளம் நிரம்புவதுடன் நிலத்தடி நீர்மட்டம் உயரும், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களின் நீர்மட்டம் உயருவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஜல்லிப்பட்டி, கம்பாலப்பட்டி மற்றும் கரியாஞ்செட்டிபாளையம் ஆகிய கிராமங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com