கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வாட்டாள் நாகராஜ் கைது

கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வாட்டாள் நாகராஜ் கைது

கம்பளா போட்டிக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி என்.எஸ்.யு.ஐ போராட்டம் நடத்தியது.
Published on

பெங்களூரு,

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் கர்நாடகத்தில் தடை செய்யப்பட்டுள்ள கம்பளா போட்டிக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் (என்.எஸ்.யு.ஐ.) பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் நேற்று போராட்டம் நடத்தினர்.இதில் கலந்துகொண்ட மாணவர் சங்கத்தினர், கம்பளா போட்டிக்கு மத்திய அரசு அனுமதி வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற சில மாணவர்கள், எருமை மாடுகளுடன் விவசாயிகள் வேடம் அணிந்து வந்திருந்தனர். இந்த கம்பளாவுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற மாநில அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.அதே போல், கம்பளாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க கோரி கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. கவர்னர் மாளிகையை முற்றுகையிட வந்த வாட்டாள் நாகராஜ் உள்பட போராட்டக்காரர்களை ராஜ்பவனுக்கு அருகில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com