காதலர் தினம் கொண்டாட காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவி விபத்தில் பலி

சேலம் அருகே காதலர் தினத்தை கொண்டாட காதலனுடன், மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவி விபத்தில் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
காதலர் தினம் கொண்டாட காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவி விபத்தில் பலி
Published on

ஓமலூர்,

சேலம் ஏற்காடு மெயின்ரோடு அஸ்தம்பட்டி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ரவினாய். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி துளசி. இவர்களுடைய மகள் ஆர்த்தி (வயது 19). இவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இதற்கு முன்பு மாணவி ஆர்த்தி, பெங்களூருவில் பள்ளிப்படிப்பை படித்துள்ளார். அப்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் அசோக் (21) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர்.

தற்போது பெங்களூருவில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் அசோக், சிவில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். அவர் ரூ.3 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் ஒன்றை சமீபத்தில் வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் தனது காதலியை பார்க்க அசோக் நேற்று சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர் ஆர்த்தியை அழைத்துகொண்டு தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூருவுக்கு சென்றுள்ளார்.

சேலத்தை அடுத்த பூசாரிப்பட்டி அருகே அக்ரஹாரம் பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் செல்லும் போது, ஆர்த்திக்கு அந்த மோட்டார் சைக்கிளை ஓட்ட அசோக் கற்றுக்கொடுத்துள்ளார். ஆர்த்தி, சாலையில் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியதுடன், அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் சறுக்கி விழுந்தது.

இதில் வண்டியை ஓட்டிச்சென்ற ஆர்த்தி சாலையிலும், அசோக் சாலையோரமும் கீழே விழுந்தனர். அதே நேரத்தில் அந்த வழியாக ஓமலூரில் இருந்து தீவட்டிப்பட்டிக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி பின்னால் வந்தது. அதன் டிரைவர் மாணவி கீழே ரோட்டில் உருண்டு விழுவதை பார்த்து, லாரியை வலது புறமாக திருப்பினார்.

இருப்பினும் லாரியின் பின்சக்கரத்தில் மாணவியின் தலை மற்றும் உடல் சிக்கியது. இதில் தலை நசுங்கி ஆர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அசோக் லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், தனது கண் எதிரே காதலி பலியானதை கண்டு கதறி அழுதார். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இன்று காதலர் தினம் என்பதால், அதை கொண்டாட அசோக் தனது காதலியை பெங்களூருவுக்கு அழைத்து செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com