தனியார் வேளாண் கல்லூரி விடுதியில் வார்டன் குத்திக்கொலை மாணவர் வெறிச்செயல்

துறையூர் அருகே தனி யார் வேளாண் கல்லூரி விடுதி வார்டனை மாணவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் வேளாண் கல்லூரி விடுதியில் வார்டன் குத்திக்கொலை மாணவர் வெறிச்செயல்
Published on

தா.பேட்டை,

திருச்சியை அடுத்த துறையூர் அருகே கண்ணனூரில் இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 45) வார்டனாக வேலை செய்து வந்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த அப்துல்ஹக்கீம் (19) என்ற மாணவர் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி. வேளாண்மை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் அப்துல்ஹக்கீம் சரியாக படிக்காமல், 8 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். அதுபற்றி அவருடைய பெற்றோருக்கு விடுதி வார்டன் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள், தங்கள் மகனை நன்றாக படிக்கும்படி அறிவுரை கூறி கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல்ஹக்கீம், நேற்று மதியம் 1 மணி அளவில் தனது அறையில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, வார்டன் அறைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த வார்டன் வெங்கட்ராமனை கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் அப்துல்ஹக்கீம் கத்தியால் குத்தினார். இதனால் வார்டன் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு விடுதியில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, வார்டன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவர்கள் வார்டனை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் வார்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் அப்துல்ஹக்கீமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com