குழந்தையுடன் ஆற்றில் குதித்த தம்பதியின் கதி என்ன? - தீயணைப்புத்துறையினர் தேடுதல் வேட்டை

மூணாறு அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 9 மாத குழந்தையுடன் ஆற்றில் குதித்த தம்பதியை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
குழந்தையுடன் ஆற்றில் குதித்த தம்பதியின் கதி என்ன? - தீயணைப்புத்துறையினர் தேடுதல் வேட்டை
Published on

மூணாறு,

மூணாறு அருகே உள்ள பெரியவாரை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 30). இவருடைய மனைவி சிவரஞ்சனி( 27). இந்த தம்பதிக்கு அருண் என்ற 9 மாத ஆண்குழந்தை இருந்தது. விஷ்ணு அந்த பகுதியில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாகவே கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலையிலும் விஷ்ணு, சிவரஞ்சனி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவரஞ்சனி கணவரிடம் கோபித்து குழந்தையை தூக்கிக் கொண்டு தன் தந்தை வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதையடுத்து விஷ்ணுவும் அவரை சமாதானப்படுத்துவதற்காக பின் தொடர்ந்து சென்றார்.

இதைத்தொடர்ந்து பெரியவாரை ஆற்றுப்பாலத்தில் சென்றபோது சிவரஞ்சனியை மறித்த விஷ்ணு அவரிடம் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென சிவரஞ்சனி தன் குழந்தை அருணுடன் பெரியவாரை ஆற்றில் குதித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத விஷ்ணு செய்வதறியாது திகைத்தார். பின்னர் அவரும் மனைவி, குழந்தையை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்தார்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து மூணாறு தீயணைப்புத்துறை மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மூணாறு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பெரியவாரை ஆற்றில் நீர்வரத்து அதிகம் உள்ளது. இதனால் அவர்களை தேடுவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com