

சென்னை,
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், தியாகராயநகர் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் நேற்று பிற்பகலில் திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் மின் விசிறி கூட போடமுடியாமல் பொதுமக்கள் வியர்வையில் நனைந்து, கடுமையான அவதிக்குள்ளாகினர்.
காரணம் என்ன?
மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்து, மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ராஜா அண்ணாமலைபுரம் 230 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் மயிலாப்பூர் 230 கி.வோ. துணை மின் நிலையங்களுக்கு செல்லும் மின்சார புதை வட கேபிள் இன்று (நேற்று) பிற்பகல் 2.33 மணிக்கு பழுதடைந்தது. இதனால் சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர், லஸ், மந்தைவெளி, சாந்தோம், தியாகராயநகர் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
தனியார் நிறுவனம் ஆப்டிக்கல் பைபர் கேபிள் பதிக்கும்போது லஸ் சர்ச் சாலை மற்றும் ராயப்பேட்டை சாலை சந்திப்பில் மின்சார புதைவட கேபிள் சேதமடைந்ததாக கண்டறியப்பட்டது. மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் 30 நிமிடங்களில் மின்சாரம் அளிக்கப்பட்டு, சீர் செய்யப்பட்டது.
போலீசில் புகார்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதைவட கேபிளை சேதப்படுத்திய தனியார் நிறுவனத்தின் மீது போலீசிடம் புகார் அளித்து இழப்பீடு கோர உள்ளது.
மேலும் புதைவடங்கள் பதிக்கும்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் கலந்து ஆலோசித்து அனுமதி வழங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.