கடலில் மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்

புதுவை கடலில் மீன் பிடித்தபோது எழுந்த ராட்சத அலையால் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயமானார்.
கடலில் மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்
Published on

புதுச்சேரி,

புதுவை குருசுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40) மீனவர். நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். இவருடன் மதி, முத்து உள்பட 3 பேர் சென்றனர். அவர்கள் கடலுக்குள் 10 நாட்டிக்கல் மைல் தொலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவு சுமார் 2 மணியளவில் கடலில் எழுந்த ராட்சத அலையில் படகில் இருந்த ரமேஷ் கடலுக்குள் விழுந்தார். இதைப் பார்த்ததும் படகில் இருந்த மற்ற 3 பேரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் கடலில் குதித்து ரமேசை தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கொண்டாபாலாஜி ராவ் மற்றும் போலீசார் ரோந்து படகில் கடலுக்குச் சென்று மீனவர்களுடன் சேர்ந்து ரமேசை தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ரமேசுக்கு கற்பகம் என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com