ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி 10 நாட்களுக்கு பின்பு உடல் வலையில் சிக்கியது

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார். 10 நாட்களுக்கு பின்பு அவரது உடல் மீனவர்கள் வலையில் சிக்கியது.
ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி 10 நாட்களுக்கு பின்பு உடல் வலையில் சிக்கியது
Published on

ராஜாக்கமங்கலம்,

இதுகுறித்த விவரம் வருமாறு:- முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்டல் ராஜ் (வயது58). இவருக்கு சொந்தமாக விசைப்படகில் கேசவன்புத்தன்துறையை சேர்ந்த சகாய யூஜின் நியூமன்(33) மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் உள்பட 18 பேர் கடந்த 9-ந் தேதி முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் கடந்த 12-ந் தேதி இரவு மீன் பிடித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சகாய யூஜின் நியூமன் கடலுக்குள் தவறி விழுந்தார். உடனே 2 மீனவர்கள் கடலில் குதித்து அவரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மீனவர்கள் கரை திரும்பி குளச்சல் கடலோர காவல்படை போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்சிலி வழக்குப்பதிவு செய்து மீனவரை தேடும் பணியை மேற்கொண்டார்.

ஆனால், சகாய யூஜின் நியூமன் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. அவர் கடலில் மூழ்கி 10 நாட்களுக்கு பின்பு வாணியக்குடியை சேர்ந்த மீனவர்கள் முட்டம் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது, மீனவர்கள் வீசிய வலையில் ஒரு ஆணின் பிணம் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே மீனவர்கள் அந்த பிணத்தை மீட்டு கரையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் மீனவர்களின் வலையில் சிக்கியது கடலில் தவறி விழுந்து மாயமான சகாய யூஜின் நியூமனின் பிணம் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து வெள்ளிச்சந்தை போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மூழ்கி பலியான சகாய யூஜின் நியூமனினுக்கு பிரகாசி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com