சாலையோரம் மிட்டாய் விற்றுக்கொண்டிருந்த போது மினி லாரி மோதி மூதாட்டி பரிதாப சாவு

சாலையோரம் மிட்டாய் விற்றுக்கொண்டிருந்த போது மினிலாரி மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். டிரைவரை கைது செய்யக்கோரி மூதாட்டியின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலையோரம் மிட்டாய் விற்றுக்கொண்டிருந்த போது மினி லாரி மோதி மூதாட்டி பரிதாப சாவு
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வனஜா (வயது 65). இவர் மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் மிட்டாய்கள் மற்றும் பழங்கள் விற்பனை செய்து வந்தார். நேற்று வனஜாவும், சிவன் கோவில் தெருவை சேர்ந்த பத்மா (45) என்பவரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் மிட்டாய் விற்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மினிலாரி வந்து கொண்டிருந்தது. இதனை ஈச்சாங்காடு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்கிற சாமுவேல் என்பவர் ஓட்டி வந்தார். அரசு பள்ளி அருகில் சென்ற போது மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் சாலையோரம் மிட்டாய் விற்றுக்கொண்டிருந்த வனஜா மற்றும் பத்மாவின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வனஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பத்மாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பத்மாவை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் அங்கு சென்று வனஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய மினிலாரி டிரைவரை கைது செய்யக்கோரி வனஜாவின் உறவினர்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அப்பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுனன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அவர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உடனடியாக விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்வோம் என உறுதியளித்தார். இதில் சமாதானம் அடைந்த வனஜாவின் உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிலாரி டிரைவர் சாமுவேலை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com