உசிலம்பட்டி அருகே குளிக்க வைத்தபோது 3 மாத பெண் குழந்தை சாவு - சிசு கொலையா என போலீசார் விசாரணை

உசிலம்பட்டி அருகே குளிக்க வைத்தபோது 3 மாத பெண்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து சிசு கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே குளிக்க வைத்தபோது 3 மாத பெண் குழந்தை சாவு - சிசு கொலையா என போலீசார் விசாரணை
Published on

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ளது குப்பணம்பட்டி. இந்த ஊரைச்சேர்ந்த சரவணன்(வயது30), கட்டக்கருப்பன்பட்டியை சேர்ந்த கலாவதி(25), ஆகிய இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 2 வயதில் யுவஸ்ரீ, 3 மாதத்தில் மோனிஷா என்ற பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் பெங்களூரில் ஐ.டி. கம்பெனியில் வேலைசெய்து வருகிறார். இந்த நிலையில் தனது குழந்தைகளுடன் கட்டக்கருப்பன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் கலாவதி வசித்து வந்துள்ளார். மோனிஷா 3 மாத குழந்தை என்பதால் கலாவதியின் தாயார் தான் குளிக்க வைப்பது வழக்கமாம்.

தாய் வெளியே சென்று விட்டதால் கலாவதியே மோனிஷாவை குளிக்க வைத்துள்ளார். அப்போது குழந்தை மூச்சுஅடைத்து அமைதியாகி விட்டது. இதனால் குழந்தையை தூக்கி கொண்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் மோனிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

குழந்தையின் உடல் உசிலம்பட்டி மருத்துவமனையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை இயற்கையாகவே, இறந்து விட்டதா, பெண் சிசுகொலையா, என விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com