விளையாடிய போது பரிதாபம்: குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி தங்கைக்கு தீவிர சிகிச்சை

சாணார்பட்டி அருகே விளையாடி கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலியானான். அவனுடன் சேர்ந்து குளத்தில் விழுந்த தங்கைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விளையாடிய போது பரிதாபம்: குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி தங்கைக்கு தீவிர சிகிச்சை
Published on

கோபால்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் மொட்டயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவரது மனைவி தனலட்சுமி (26). இவர்களுக்கு ரித்தீஸ்வரன் (5) என்ற மகன் இருந்தான். ரித்திகாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளார். விஜயகுமார் குடும்பத்துடன் சாணார்பட்டி அருகேயுள்ள அஞ்சுகுளிப்பட்டியில் தனியார் தோட்டத்தில் தங்கி விவசாய வேலை செய்து வருகிறார். அந்த தோட்டம் அருகே குளம் ஒன்று உள்ளது.

நேற்று மதியம் அந்த குளத்தின் கரையோரத்தில் குழந்தைகள் இருவரும் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் குழந்தைகளை காணவில்லை. உடனே விஜயகுமார் அவர்களை தேடினார். அப்போது மகனும், மகளும் குளத்தில் தவறி விழுந்து நீரில் தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் களை குளத்தில் இருந்து மீட்டார். பிறகு அவர்களை சிகிச்சைக்காக கொசவப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது ரித்தீஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

இதையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ரித்திகாஸ்ரீ மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடி கொண்டிருந்த சிறுவன் குளத்தில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com