மின்சார ரெயில்களில் யார்- யார் பயணிக்கலாம்? - மேற்கு ரெயில்வே விளக்கம்

மும்பையில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் யார், யார் பயணம் செய்ய முடியும் என மேற்கு ரெயில்வே விளக்கம் அளித்து உள்ளது.
மின்சார ரெயில்களில் யார்- யார் பயணிக்கலாம்? - மேற்கு ரெயில்வே விளக்கம்
Published on

மும்பை,

கொரோனா ஊரடங்கின் தளர்வாக மும்பையில் கடந்த 15-ந் தேதி அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் அத்தியாவசிய பணியாளர்களின் பட்டியலில் யார், யார் உள்ளார்கள் என்ற தெளிவான தகவல் இல்லாமல் இருந்தது.

இதனால் யாரை ரெயிலில் பயணிக்க அனுமதிப்பது, மறுப்பது என்ற குழப்பம் ரெயில்வே போலீசாருக்கே ஏற்பட்டது. எனவே ரெயில்வே போலீசாருக்கு தேவையில்லாத பணி சுமை ஏற்பட்டது. இதேபோல வங்கி ஊழியர்கள், ஊடக பணியாளர்கள் கூட ரெயில்களில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

யார்-யார் பயணம் செய்யலாம்?

இந்தநிலையில் மும்பை புறநகர் மின்சார ரெயில்களில் யார், யார் பயணம் செய்ய முடியும் என்ற தகவலை மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரெயில்வே ஊழியர்கள், மந்திராலயா மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், மும்பை பெருநகரப்பகுதியில் உள்ள மும்பை மாநகராட்சி, மிரா -பயந்தா, வசாய் விரார், தானே, கல்யாண்- டோம்பிவிலி, நவிமும்பை, பால்கர் ஆகிய மாநகராட்சிகளை சேர்ந்த ஊழியர்கள், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள், மாநில போலீசார், ரெயில்வே போலீசார், பெஸ்ட், மாநில போக்குவரத்து கழகம் மற்றும் மும்பை பெருநகரில் உள்ள மாநகராட்சி போக்குவரத்து கழக ஊழியர்கள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி, பரிசோதனை மைய ஊழியர்கள் ஆகியோர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com