

சென்னை,
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் மகாதேவன் (வயது 56). என்ஜினீயர். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், மகாதேவன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து ரூ.60 லட்சம் இழப்பீடு கோரி, மகாதேவனின் மனைவி செல்வி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.சரோஜினி தேவி, மனுதாரருக்கு ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.15 லட்சத்து 41 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.