மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக வேப்பூரில் 126 மில்லி மீட்டர் பதிவு

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வேப்பூரில் 126 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக வேப்பூரில் 126 மில்லி மீட்டர் பதிவு
Published on

கடலூர்,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. பின்னர் 5.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது.

நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு மழை பெய்யாமல் ஓய்ந்திருந்தது. இதற்கிடையே இரவு 11 மணி அளவில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. பிறகு அதிகாலை 2 மணிக்கு பிறகு விடிய விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது.

விருத்தாசலம் பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி, கார்மாங்குடி, மேலப்பாளையூர், பேரளையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதில் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வாளி, பாத்திரம் போன்றவற்றால் மழைநீரை வாரி இறைத்து வெளியேற்றினர்.

மேலும் பேரளையூர் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதேபோல் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, கரும்பு பயிர்களும் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, வி.களத்தூர் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் ஓடைத்தண்ணீர் வெள்ளாறு வழியாக தொழுதூர் அணைக்கட்டிற்கு நேற்று காலை வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் வினாடிக்கு 380 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் இருந்து வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு 380 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், பண்ருட்டி மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 126 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக பண்ருட்டியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 53.07 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com