மாவட்டத்தில் பரவலாக மழை: மின்சாரம் தாக்கி தே.மு.தி.க. பிரமுகர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி தே.மு.தி.க. பிரமுகர் ஒருவர் இறந்தார்.
மாவட்டத்தில் பரவலாக மழை: மின்சாரம் தாக்கி தே.மு.தி.க. பிரமுகர் பலி
Published on

விழுப்புரம்,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை உள்நோக்கி நகர்வதால் மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்றும் விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இந்த மழையின்போது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

விக்கிரவாண்டி அருகே வீடூர் புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் தேவன் (வயது 35), தே.மு.தி.க. கிளை செயலாளராக இருந்து வந்தார்.

இவர் சொந்த வேலை காரணமாக நேற்று புதுச்சேரி மாநிலம் திருக்கனூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து மதியம் 2.30 மணியளவில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். வீடூர் மின்வாரிய அலுவலகம் அருகில் வந்த போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து தேவன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com