

தர்மபுரி,
தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 37). மருந்து விற்பனை பிரதிநிதி. இவருடைய மனைவி திவ்யா (32). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே ராஜ்குமாருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுடைய குழந்தைகள் ராஜ்குமாரின் தாயார் வீட்டுக்கு சென்றிருந்தனர். இதனிடையே நேற்று அதிகாலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கொலை
இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் திவ்யாவின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு ராஜ்குமார் தனது குடும்பத்தினருக்கு போன் செய்து, மனைவியை அடித்துக்கொலை செய்து விட்டேன். இதனால் குழந்தைகளை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் ராஜ்குமாரின் குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு அவருடைய வீட்டிற்கு வந்தனர். அப்போது திவ்யா இறந்து கிடப்பதும், ராஜ்குமார் தூக்கில் தொங்குவதும் தெரியவந்தது. இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.