வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு தேடி கிராமங்களுக்குள் படையெடுக்கும் காட்டு யானைகள்

வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு தேடி கிராமங்களுக்குள் காட்டு யானைகள் படையெடுக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு தேடி கிராமங்களுக்குள் படையெடுக்கும் காட்டு யானைகள்
Published on

நீலகிரி

கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலை மாமரம் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் செம்மனாரை மற்றும் கோழிக்கரை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் யானைகள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். இதனால் கிராம மக்கள் எப்போதும் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். இந்த கிராமங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. தற்போது பலா பழ சீசன் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் சமவெளி பகுதியையொட்டி உள்ள வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. யானைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி செம்மனாரை, கோழிக்கரை ஆதிவாசி கிராமங்களில் முகாமிட்டு உள்ளன.

வனப்பகுதிக்குள் சிறிய சாலை மற்றும் நடைபாதைகளில் யானைகள் கூட்டமான நிற்கின்றன. இதன் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரவே கிராம மக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எப்போதும் கிராம மக்கள் கூட்டமாக வெளியே சென்று வருகிறார்கள். சில நேரங்களில் புதர் மறைவில் நிற்கும் காட்டு யானைகள் தாக்க நேரிடும் என பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இதன் காரணமாக கூலி வேலைக்கு செல்வோரும் சில நேரங்களில் யானைகளுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி உள்ளது.

கடந்த ஆண்டு இந்த கிராம கிராமங்களை சேர்ந்த 2 பேரை யானை மிதித்து கொன்றது குறிப்பிடத்தக்கது. பலா பழ சீசன் முடியும் வரை ஆதிவாசிகள் உட்பட பொதுமக்கள் பாதுகாப்புடன் சென்று வர வேண்டும் என்றும், இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இருப்பினும் யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் படையெடுத்து வருவதால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com