

ஆவடி,
ஆவடி வசந்தம் நகர் கணபதி கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது 27). இவரது சொந்த ஊர் மதுரை. இவருடைய மனைவி சித்ரா (25). இவர், ஆவடியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் திருவேற்காட்டில் உள்ள கோவிலில் கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் சித்ராவுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. கணவர் பிரிந்து சென்றுவிட்டதாகவும், இதனால் குழந்தைகளை பெற்றோரிடம் விட்டுவிட்டு, நாகராஜை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் சித்ரா, குடும்ப கட்டுப்பாடு செய்திருப்பது நாகராஜுக்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் நாகராஜின் தாயார், அவரை ஊருக்கு வந்துவிடும்படி அழைத்ததாகவும் தெரிகிறது.
இதனால் தனது கணவர் நாகராஜை தன்னிடமிருந்து பிரித்து சென்று, அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து விடுவார்களோ? என பயந்துபோன சித்ரா, வீட்டின் மொட்டை மாடியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த காயம் அடைந்த சித்ரா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
அதேபோல் ஆவடியை அடுத்த பட்டாபிராம் அணைக்கட்டுசேரி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவருடைய மனைவி தேவி (24). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. குழந்தை இல்லை.
நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த தேவி, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தேவிக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் இதுபற்றி திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.