

திட்டச்சேரி:
திட்டச்சேரி- ஆலத்தூர் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திட்டச்சேரியில் இருந்து தண்டாளம் வழியே ஆலத்தூர் வரை செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையில் திருமலைராஜன் ஆறுபாலம் முதல் ஆலத்தூர் வரை உள்ள சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கீழே விழுகின்றனர்
மேலும் இந்த சாலை திட்டச்சேரியில் இருந்து திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், அம்பகரத்தூர் காளியம்மன் கோவில் மற்றும் விழிதியூர், காக்காமொழி, அருள்மொழிதேவன் வழியாக காரைக்கால் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்தது காயம் அடைகின்றனர்.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.