மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கெடுபிடி: ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி மண்டிகள் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கெடுபிடி செய்வதால், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மண்டிகள் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கெடுபிடி: ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி மண்டிகள் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
Published on

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரியில் கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, காலிபிளவர், நூல்கோல், டர்னீப் போன்ற காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. தற்போது காய்கறி சீசன் என்பதால், காய்கறிகள் அதிகளவில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மண்டிகளில் விற்பனை செய்து வந்தனர்.

ஊரடங்கு உத்தரவால் 6 மண்டிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ளது. இதனால் இங்கு காய்கறிகள் ஏலம் நடைபெறவில்லை. இதற்கு பதிலாக 2 இடங்களில் சாலையோரம் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கி ஏலம் நடந்து வருகிறது. ஊட்டியில் அதிகமான காய்கறிகள் ஏலம் போகாததால், மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு விவசாயிகள் நேரடியாக சரக்கு வாகனங்களில் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.

விவசாயிகளுக்கு கெடுபிடி

இதற்கிடையே மேட்டுப்பாளையத்தில் மதியம் 1 மணி வரை மட்டும் மண்டிகள் செயல்பட வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதித்து உள்ளனர். இதை மீறி சரக்கு வாகனங்கள், லாரிகளில் காய்கறிகள் கொண்டு வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து மண்டிக்கு சீல் வைக்கப்படுகிறது. இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் கெடுபிடிகளுக்கு உள்ளாவதால், என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். மதியம் 1 மணிக்கு மேல் ஏலம் நடைபெறாததால், விவசாயிகள் காய்கறி மூட்டைகளுடன் காத்திருக்கும் பரிதாப நிலை உள்ளது.

மறுநாள் விற்பதால் காய்கறிகள் வீணாகும் சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் உரிய விலையும் கிடைக்கவில்லை. அதிக வாடகைக்கு சரக்கு வாகனங்களை அமர்த்தி கொண்டு சென்று விற்பனை செய்தும் கட்டுப்படி ஆகவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர். எனவே ஊட்டி மார்க்கெட்டில் 6 காய்கறி மண்டிகளையும் திறந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம் மேட்டுப்பாளையத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து ஊட்டி காய்கறி மண்டி உரிமையாளர் ராஜா முகமது கூறியதாவது:-

மண்டிகளை திறக்க வேண்டும்

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 6 மண்டிகள் செயல்பட்டு வந்ததால், தினமும் விவசாயிகள் 100 சரக்கு வாகனங்களில் காய்கறிகளை கொண்டு வந்தனர். ஒரு நாளைக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை வியாபாரம் நடைபெறும். உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்வதுடன், டோக்கன்களும் வழங்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவால் சாலையோரத்தில் காய்கறிகள் ஏலம் நடக்கிறது. ஊரடங்குக்கு முன் 400 டன் காய்கறிகள் ஏலத்துக்கு வந்தது. தற்போது 2 டன் காய்கறிகள் மட்டுமே ஏலத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

போதுமான இடம் இல்லாததால் காய்கறிகளை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது காய்கறிகள் அதிகமாக வந்தாலும், மழையில் இருந்து பாதுகாக்க குடோன் இல்லாததால் கொள்முதல் செய்வது இல்லை. எனவே மார்க்கெட்டில் சமூக இடைவெளி, வாகனங்களுக்கு டோக்கன், தொழிலாளர்கள் முகக்கவசம் அணிவது போன்ற விதிமுறைகளுடன் காய்கறி மண்டிகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும். அப்போதுதான் ஊட்டியில் விவசாயிகள் வழக்கம்போல் காய்கறிகளை விற்பனை செய்யவும், உரிய விலையையும் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com