முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் சரத்பவார் சந்திப்பு - புயல் சேத நிவாரணம் குறித்து விவாதித்தார்

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிசர்கா புயல் சேத நிவாரணம் குறித்து விவாதித்தார்.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் சரத்பவார் சந்திப்பு - புயல் சேத நிவாரணம் குறித்து விவாதித்தார்
Published on

மும்பை,

மராட்டிய சிவசேனா கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், அக்கட்சி தலைவர் சரத்பவார் இந்த வார தொடக்கத்தில் 2 நாட்கள் நிசர்கா புயல் பாதித்த ராய்காட் மற்றும் ரத்னகிரி பகுதியில் சுற்றுப்பயணம் செய்து புயல் சேதத்தை பார்வையிட்டார்.

அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு மாநில அரசு விரைவில் நிவாரணம் வழங்கும் என்றும், மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெறப்படும் என்றும் கூறினார்.

இந்தநிலையில், நேற்று சரத்பவார் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்தார். மும்பை மேயர் பங்களாவில் அவர்களது இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது.

இது குறித்து ராய்காட் எம்.பி. சுனித் தத்காரே கூறுகையில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடனான சந்திப்பின் போது, ராய்காட் மற்றும் கொங்கன் சுற்றுப்பயணம் குறித்து விளக்கம் அளித்தார். நிசர்கா புயலால் தோட்டக்கலை மற்றும் மீன்வளத்துறைகளுக்கு ஏற்பட்டு உள்ள சேதங்கள் குறித்தும், ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை குறித்தும் முதல்-மந்திரியிடம் விளக்கம் அளித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கொள்கை முடிவை மாநில அரசு எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட ராய்காட்டுக்கு ரூ.100 கோடியும், ரத்னகிரிக்கு ரூ.75 கோடியும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com