கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோருடன் விரைவில் முதல்-அமைச்சரை சந்திப்பேன் தொல்.திருமாவளவன் பேட்டி

சேலத்தில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோருடன் விரைவில் முதல்-அமைச்சரை சந்திப்பேன் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோருடன் விரைவில் முதல்-அமைச்சரை சந்திப்பேன் தொல்.திருமாவளவன் பேட்டி
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கொலையை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தளவாய்பட்டி கிராமத்தில் 8-ம் வகுப்பு மாணவி ராஜலட்சுமியை அவருடைய தாய் முன்னே தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை பெண் துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் விசாரணை நடத்த வேண்டும். சேலம் மாவட்டம் முதல்-அமைச்சருடைய சொந்த மாவட்டம் என்பதால் கொலை செய்யப்பட்ட மாணவி ராஜலட்சுமியின் பெற்றோருடன் விரைவில் நான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளேன்.

வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் உடனே ஜாமீனில் வெளியே வருகின்றனர். மாணவியை கொலை செய்த தினேஷ்குமார் மீதான வழக்கை விரைவு கோர்ட்டு விசாரணை நடத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வாதாட நேர்மையான சிறப்பு அரசு வக்கீல் நியமிக்க வேண்டும்.

மாணவியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். போலீசார் தினேஷ்குமாரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. சிறுமியை கொலை செய்தவுடன் அவரை இருசக்கர வாகனத்தில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர். ஆகவே இந்த கொலையை திட்டமிட்டு செய்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. இந்த கொலை தொடர்பாக தினேஷ்குமார் மனைவி உள்பட சிலரிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.

ஒருவர் மீது மட்டும் வழக்குப்போட்டு முடிக்க கூடாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த பிரச்சினை தொடர்பாக ஏதாவது கருத்து சொல்வார் என்று நினைத்தேன். ஆனால் இதுவரை அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது.

சி.பி.ஐ. அலுவலகத்திலேயே ஊழல் நடந்துள்ளதால் இந்த வழக்கை நாங்கள் சி.பி.ஐ.க்கு மாற்ற கோரவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதை தடுப்பதற்காக மதசார்ப்பற்ற அணிகள் ஓரணியில் திரள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. ஊழல் குற்றச்சாட்டு பற்றி பேசும் எதிர்க்கட்சிகள் மீது அரசு வழக்கு தொடர்வது வாடிக்கை தான். இந்த வழக்குகள் அனைத்தும் நீர்த்து போகும். தமிழக அரசியலில் திரை கவர்ச்சி எடுப்படாது. ஓட்டுகளை சிதறிடிக்க தான் முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com