

கள்ளக்குறிச்சி
ஆய்வுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்ட-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்த மாதத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துக்கள் குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் இனிவரும் காலங்களில் குற்றசம்பவங்களை தடுப்பது சம்மந்தமாக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை, ஆற்றுத்திருவிழா ஆகிய விழா காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பண்டிகைகளை பாதுகாப்புடன் கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல் மற்றும் வருவாய்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வேகத்தடைகள்
கடந்த மாதத்தைவிட இந்த மாதம்(டிசம்பர்) சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது. இதேபோன்று வரும் காலங்களில் சாலை விபத்துகள் நிகழாமல் இருக்க சாலைகளில் தேவையான தடுப்புகள், தற்காலிக வேகத்தடைகள், விபத்து எச்சரிக்கை பலகைகள் மற்றும் விளக்குகளை அமைத்திட காவல்துறை அலுவலர்களிடம் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், கோட்டாட்சியர்கள் சரவணன், சாய்வர்தினி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜலட்சுமி, கங்காதரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா, அலுவலக மேலாளர்(குற்றவியல்) சிவசங்கரன் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.