கொரோனா உறுதியானது தெரியாமல் முதியவர் உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்திய உறவினர்கள் - ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் சாலை மறியல்

மணலி அருகே கொரோனா தொற்று உறுதியானது தெரியாமல் முதியவர் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்திய உறவினர்கள், அவரது உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வராததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொரோனா உறுதியானது தெரியாமல் முதியவர் உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்திய உறவினர்கள் - ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் சாலை மறியல்
Published on

திருவொற்றியூர்,

மணலி புதுநகர் பகுதியில் 62 வயது முதியவர், தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். முதியவரின் மனைவிக்கு நேற்று முன்தினம் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அவரை மணலி புதுநகரில் உள்ள மாநகராட்சி சுகாதார ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கணவன்-மனைவி இருவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தனர். பின்னர் மாத்திரையை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் இரவு முதியவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். பின்னர் அவரது உடலை வீட்டுக்கு எடுத்து வந்து குளிர்சாதன பெட்டியில் வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலை 11 மணியளவில் முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்காக இறுதிச் சடங்கு சம்பிரதாயங்களை உறவினர்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த மணலி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், முதியவர் இறந்த விஷயம் தெரியாமல் அவரை கொரோனா சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளனர்.

ஆனால் அவர் இறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகாதார அதிகாரிகள், அங்கிருந்த அவரது உறவினர்களிடம் முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் அவரது உடலை நீங்கள் அடக்கம் செய்யக்கூடாது. நாங்கள்தான் அடக்கம் செய்வோம். ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருக்கிறது என்று கூறினர்.

இதனால் வேறு வழியில்லாமல் இறுதிச்சடங்கு சம்பிரதாய முறைகளை அப்படியே நிறுத்திவிட்டு அனைவரும் அழுது கொண்டிருந்தனர். ஆனால் மாலை 5 மணி ஆகியும் முதியவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் உடலை எடுக்காமல் எவ்வளவு நேரம் காத்திருப்பது, நீங்கள் எடுத்துச் செல்ல முடியவில்லை என்றால் எங்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள் என்று கேட்டனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுக்கவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெகுநேரமாக கணவனின் உடல் வெளியில் கிடந்ததால் ஆத்திரமடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உடலை எடுக்க அனுமதிக்காத அதிகாரிகளை கண்டித்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்பும் ஆம்புலன்ஸ் வராததால் உறவினர்கள் வேறுவழியில்லாமல் அதிகாரிகளின் அனுமதி இல்லாமலேயே முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்காக அருகிலுள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது அங்கு மாநகராட்சியின் ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக வந்தது.

அதனுடன் வந்த அதிகாரிகள், முதியவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் ஆம்புலன்சில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனால் மணலி புதுநகர் பகுதியில் சுமார் 6 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com