தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: சென்னையில் சாலைகள் வெறிச்சோடின

தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின. சாலையில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர்.
தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: சென்னையில் சாலைகள் வெறிச்சோடின
Published on

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 7-ம் கட்டமாக நேற்று முன்தினம் முதல் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது.

சென்னையில் ஏற்கனவே முழு ஊரடங்கின்போது 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடந்த மாதம் 5, 12, 19, 26-ந்தேதிகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து சென்னையில் 7-வது முறையாகவும், இம்மாதம் முதல் தடவையாகவும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதனால் முழு ஊரடங்கிலும் அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டல்கள், துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள், அலங்கார பொருட்கள் விற்பனையகங்கள் என அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. மளிகை கடைகள், காய்கறி, பழக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் நேற்று முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடைகளும் மூடப்பட்டன. மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் மட்டும் செயல்பட்டன.

சென்னை தியாகராயநகர் பகுதி நேற்று ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ரங்கநாதன் சாலையில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டதால், அந்தப்பகுதியே ஆள் அரவமின்றி அமைதியாக காணப்பட்டது. அதேபோல பாண்டிபஜார், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட நகரின் வணிக பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு அமைதியாக காட்சி அளித்தன.

முழு ஊரடங்கையொட்டி நகரின் அண்ணாசாலை, மெரினா காமராஜர் சாலை, சேப்பாக்கம் வாலாஜா சாலை, தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே.சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. பிரதான சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் முடக்கப்பட்டன.

நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உரிய அடையாள அட்டைஆவணங்கள் இல்லாமல் செல்வோர் மற்றும் தேவையில்லாமல் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்பட்டதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவாறு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். சென்னையின் நகர்ப்புறங்கள் போலவே புறநகர் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அம்மா உணவகங்கள் இயங்கியன
சென்னையில் நேற்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு சென்னை நகரமே வெறிச்சோடி கிடந்தது. ஆனாலும் ஏழை-எளியோரின் பசியாற்றும் இடங்களாக திகழும் அம்மா உணவகங்கள் வழக்கம் போலவே செயல்பட்டன. இங்கு மலிவான கட்டணத்தில் ஏழை-எளியோர் தேவையான உணவுகளை வாங்கிச் செல்வதை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் அம்மா உணவகங்களை நோக்கி சாப்பாடு வாங்க சைக்கிளில் சென்றவர்கள் சிலரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் உண்மையிலேயே சாப்பாடு வாங்க செல்கிறார்கள் என்று தெரிந்ததும், போலீசார் அவர்களை அனுமதித்தனர். இதுபோல நகரின் அனைத்து இடங்களிலும் அம்மா உணவகங்களுக்கு செல்வோரை போலீசார் மனிதாபிமானத்துடன் அனுமதித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com