பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: கணவன், மாமியாருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவன், மாமியாருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: கணவன், மாமியாருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை
Published on

திருச்சி,

திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். மாநகராட்சி துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், தொட்டியத்தை சேர்ந்த மாலதிக்கும்(வயது 30) கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது, மாலதியின் பெற்றோர் 15 பவுன் நகைகள் வரதட்சணையாக போட்டு இருந்தனர். பின்னர், முத்துக்குமார் தனது தாய் அம்சவள்ளியுடன் சேர்ந்து கூடுதலாக வரதட்சணை கேட்டு மாலதியை கொடுமை படுத்தினார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாலதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், மாலதியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இதுதொடர்பாக மாலதியின் கணவர் முத்துக்குமார், மாமியார் அம்சவள்ளி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நீதிபதி வனிதா முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட மாலதியின் கணவர் முத்துக்குமார், மாமியார் அம்சவள்ளி ஆகியோருக்கு பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய குற்றத்துக்காக தலா 3 ஆண்டுகளும், தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக தலா 7 ஆண்டுகளும், வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் தலா 2 ஆண்டுகளும் சிறை தண்டனையும், தலா 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அத்துடன் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்த வழக்கில் இருந்து புரோக்கர் உள்பட 3 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸ்தரப்பில் அரசு வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com