கட்டிட பணியின்போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

விழுப்புரம் அருகே கட்டிட பணியின்போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் இறந்தார். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர், மேற்பார்வையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கட்டிட பணியின்போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
Published on

விழுப்புரம்,

செஞ்சி அருகே கல்யாணம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தனவேல் மனைவி ஜெயந்தி (வயது 29). இவர் கடந்த சில நாட்களாக விழுப்புரம்-செஞ்சி சாலை சுந்தரம் நகர் பகுதியில் பாலா என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கான கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜெயந்தி, அங்குள்ள வீட்டின் 3-வது மாடியில் கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். உடனே சக தொழிலாளர்கள் விரைந்து சென்று ஜெயந்தியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ஜெயந்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தனவேல், விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், எந்தவித பாதுகாப்பும், உபகரணுமும் இன்றி கட்டிட பணியில் ஈடுபடுத்திய வீட்டின் உரிமையாளரான வளவனூரை சேர்ந்த பாலா, அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் பழனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூறியிருந்தார். அதன்பேரில் பாலா, பழனி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com