அய்யப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம்: கேரள முதல்-மந்திரி உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்

அய்யப்பன் கோவிலில் 2 பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்த கேரள முதல்-மந்திரி உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அய்யப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம்: கேரள முதல்-மந்திரி உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்
Published on

கரூர்,

கேரளாவிலுள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2 பெண்கள், கோவிலின் பின்புற வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை சாமி தரிசனத்திற்காக அனுமதித்த கேரள அரசை கண்டித்து, சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தமிழ்வாணன், மாவட்ட பொது செயலாளர்கள் மோகன், கைலாசம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் பேசுகையில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆகம விதிகளை கடைபிடித்து சபரிமலை அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எல்லா பெண்களும் அய்யப்பன் கோவிலுக்கு செல்லலாம் என கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய போதிலும், பெரும்பாலான பெண்கள் அய்யப்பன் கோவிலுக்கு செல்வதில்லை.

ஒரு சிலர் மட்டும், கேரள அரசின் ஆதரவோடு அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அய்யப்பன்கோவில் தொடர்பான கோர்ட்டு தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், சபரிமலையில் பழைய முறைப்படி வழிபாடு நடத்தி அதன் புனிதத்தை காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினர்.

தொடர்ந்து அய்யப்பன் கோவிலில் 2 பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உருவப் படத்தை எரித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, கேரள அரசை கண்டித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாவட்ட தலைவர் குணசேகரன், பாரதீய மஸ்தூர் சங்க மாவட்ட பொறுப்பாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com