டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி போராட்டம்

பாவூர்சத்திரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபிரியர்கள் போட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி போராட்டம்
Published on

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம்- கடையம் ரோட்டில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை பொதுமக்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த சில மாதங் களுக்கு முன்பு மூடப்பட்டது. பின்னர் இந்த கடை சின்னத்தம்பி நாடார் பட்டி செல்லும் சாலை அருகில் கடந்த மாதம் திறக்கப்பட இருந்தது. பொதுமக்களின் எதிர்ப்பால் அப்போது திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி திறக்கப்பட இருந்த கடை பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அன்று திறக்கப்படவில்லை. மறுநாளான நேற்று முன்தினமும் திறக்கப்படவில்லை.

நேற்று காலையில் டாஸ்மாக் கடைக்கு ஊழியர்கள் வந்து கடையை திறந்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த மதுபிரியர்கள் ஆர்வத்துடன் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பெண்கள் அங்கு திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அங்கு ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபிரியர்களும் கடையை மூடக்கூடாது என்று கூறி போட்டி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. பெண்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொரு புறம் மதுபிரியர்களும் சமையல் செய்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

டாஸ்மாக் கடைக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com