

சென்னை,
அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளிடம் 10 ஆண்டுகளாக கற்ற மொத்த அரசியலையும் தனி ஆளாக தேர்தல் களத்தில் காட்டி வருகிறார் குஷ்பு. ஆணாதிக்கம் மிக்க அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்தோடு அடுத்த அயர்ன் லேடியாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ள குஷ்புவிற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
பிரச்சார வாகனத்தில் ஏறி நின்று கொண்டு, வாக்காளர்களை பார்த்து சிரித்தோம், கையசைத்தோம் என கடமைக்கு வாக்கு சேகரிக்காமல், வழக்கமான அரசியல் பாணியில் இருந்து முற்றிலும் விலகி தனியே தெரிகிறார் குஷ்பு. நான் மிகப்பெரிய நடிகை, நட்சத்திர வேட்பாளர் என்ற பந்தா எதுவுமே குஷ்புவிடம் துளியும் கிடையாது. மக்களை வீடு, வீடாக சென்று தனித்தனியாக சந்திக்கிறார். மக்கள் கூறும் குறைகளை செவி கொடுத்து கேட்பதோடு இதற்கு என்னால் நிச்சயம் தீர்வு கொடுக்க முடியும். இதை நான் உங்களுடைய மகளாக, சகோதரியாக உறுதியளிக்கிறேன் என மனப்பூர்வமாக வாக்குறுதி கொடுக்கிறார்.
வெயில், கொரோனா பரவல் என அரசியல் களத்தில் ஆண் வேட்பாளர்களே ஜகா வாங்கும் போது, ஆயிரம் விளக்கு தொகுதியில் கில்லியாக ஆதரவு திரட்டி வருகிறார் குஷ்பு. ஒருநாள் கூட தவறாமல் ஆயிரம் விளக்கின் அனைத்து சந்து பொந்து தெருக்களிலும், குறுகலான சாலைகளிலும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். ஒவ்வொரு வாக்காளர்கள் வீட்டு வாசலிலும் போய் நின்று, அவர்களுடைய கைகளைப் பற்றி நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசி வரும் குஷ்புவிற்கு, நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நான் ஒரு தாய். அதனால் எனக்கு குழந்தைகள் பிரச்சனை தெரியும்?. நான் ஒரு பெண் அதனால் பெண்கள் படும் துயரம் புரியும் என ஆயிரம் விளக்கில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் வீடு, வீடாக நடந்து சென்று வாக்கு சேகரிக்கும் குஷ்புவிற்கு பெண்கள் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது. இதுவரை எந்த வேட்பாளர்களும் செய்ய முடியாத அளவிற்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் சுமார் 85 சதவீதம் பகுதிகளில் குஷ்பு நடந்து சென்று தான் வாக்கு சேகரித்துள்ளார். மக்களோடு மக்களாக கலந்து இருக்க வேண்டும் என்பதை விரும்பும் குஷ்பு எவ்வித பிரச்சார வாகனத்தையோ, திறந்தவெளி ஜீப்பையோ தன்னுடைய பரப்புரைக்கு பெரிதாக பயன்படுத்துவதில்லை.
இப்படி கால் வலியையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்று வாக்கு சேகரிக்கும் குஷ்புவின் முயற்சிகளுக்கு நல்ல பலன்கிடைத்துள்ளது. குஷ்பு பிரச்சாரத்திற்காக கிளம்பிவிட்டார் என்று தெரிந்தாலே ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் ஆராத்தி தட்டுடன் குஷியாக கிளம்பி வந்துவிடுகின்றனர். தங்கள் வீட்டு சொந்த மகளை வரவேற்பதைப் போல பட்டாசு வெடித்தும், ஆராத்தி எடுத்தும், மலர் தூவியும் தடபுடலாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இப்படி ஒரு பெண் வேட்பாளருக்கு சிறப்பாக வரவேற்க காரணம் முகத்தில் துளியும் புன்னகை மாறாது, ஏழை எளிய மக்களுடன் இன்முகத்துடன் கலந்துரையாடும் குஷ்புவின் குணம் தான் என்கின்றனர் அப்பகுதி பெண்கள்.
அதேபோல் வாக்களியுங்கள் தாமரைக்கு... வாய்ப்பளியுங்கள் உங்கள் சகோதரிக்கு என்ற குஷ்புவின் பிரச்சார வாசகமும் ஆயிரம் விளக்கு தொகுதி மக்களை சுண்டியிழுக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே குஷ்புவிற்கு பெண்களின் ஆதரவு பெருமளவில் பெருகி வந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளும் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளன. கடந்த சில நாட்களாக வெளியாகும் பிரபல தொலைக்காட்சி, பத்திரிகைகளின் கருத்துக்கணிப்பின் படி கணிசமான வாக்குகளை பெற்று குஷ்பு அமோக வரவேற்பு பெறுவார் என கூறப்பட்டுள்ளது.