

கடலூர்,
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிவில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருபவர் வரக்கால்பட்டை சேர்ந்த அருள் மகன் பிரபு (வயது 30). இதே போல் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வருபவர் நாச்சியார்பேட்டையை சேர்ந்த மணி மனைவி லட்சுமி(46).
இந்த நிலையில் மாற்றுத்திறனாளி லட்சுமி, பிரபு உடன் பண்ருட்டியை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் மாயமணி (34) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது பிரபுவும், லட்சுமியும் தாங்கள் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளோம், உங்களுக்கும் வேலை வாங்கி தரவேண்டுமா? என மாயமணியிடம் கேட்டுள்ளனர்.
இதை நம்பிய மாயமணி, தனக்கு அரசு அலுவலகங்களில் ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுக்கும்படி, அவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், வேலை வாங்கி கொடுக்க வேண்டுமானால் தங்களுக்கு ரூ.3 லட்சம் தரவேண்டும் என்றனர். ஆனால் பணம் இல்லாத மாயமணி, வீட்டில் இருந்த நகைகளை எடுத்து, லட்சுமியிடம் கொடுத்து அதனை ரூ.3 லட்சத்துக்கு அடகு வைத்துக்கொள்ளும்படி கூறினார். நகைகளை பெற்றுக்கொண்ட லட்சுமி, அதனை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமியும், பிரபுவும் மாயமணியிடம் உங்களுக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் டிரைவர் வேலை கிடைத்துள்ளது என்று கூறி அதற்கான ஆணையை கொடுத்தனர்.
அந்த ஆணையை பெற்றுக்கொண்ட மாயமணி, கலெக்டர் அலுவலகம் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் ஆணையை கொடுத்தார். ஆணையை பெற்ற அதிகாரி, அது போலியானது என அறிந்து, உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து வந்து, மாயமணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான், மாயமணிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு, லட்சுமியும், பிரபுவும் போலி முத்திரைகளை பயன்படுத்தி வேலைக்கான ஆணையை தயார் செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி, பிரபு ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை மற்றும் ரூ.1 லட்சம், போலி முத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.