

தொண்டி
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் குறுங்காடுகள், அடர்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் திருவாடானை யூனியனில் உள்ள 47 ஊராட்சிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கோடனூர் ஊராட்சியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்காடு அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஆலம்பாடி காந்தி கூறும்போது, கோடனூர் ஊராட்சியில் டி.கிளியூர், ஆலம்பாடி கிராமங்களில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு பராமரித்து வருகிறோம். இந்த ஊராட்சியில் உள்ள பாண்டுகுடி அரசு மேல் நிலைப்பள்ளி, காட்டியனேந்தல், மாதவன் கோட்டை, கோடனூர், பிள்ளையாரேந்தல், அரசு பள்ளிகளின் வளாகத்தில் 100 வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயிரிடப்பட்டுள்ள முள்ளங்கி, வெண்டை, கத்தரிக்காய், அவரை, கொத்தவரை, பப்பாளி, முருங்கை, மிளகாய், தக்காளி, கீரைகள் போன்றவற்றை ஊராட்சியில் உள்ள கர்ப்பிணிகளுக்கு தினமும் வழங்கி வருகிறோம்.மேலும் காட்டியனேந்தல், கோடனூர் ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் வேம்பு, புளி, புங்கை, பூசரை, நாவல், நெல்லி, வாகை என 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்காடுகள் அமைக்கப்படுகிறது. இதற்காக சுந்தரமுடையான் பழப்பண்ணை, போகலூர் தோட்டக்கலைப் பண்ணைகளில் இருந்து மரக் கன்றுகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்