உல்லாசத்திற்கு வரமறுத்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளி கைது - தடுக்க சென்ற மாமியார் மீதும் தாக்குதல்

திருப்பூரில் உல்லாசத்திற்கு வரமறுத்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கொலையை தடுக்க வந்த மாமியாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உல்லாசத்திற்கு வரமறுத்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளி கைது - தடுக்க சென்ற மாமியார் மீதும் தாக்குதல்
Published on

திருப்பூர்,

திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 32). இவர் செல்லம் நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கோமதி(30). மூர்த்தி வேலை பார்த்த அதே நிறுவனத்தில் கோமதியும் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். சில நேரங்களில் மூர்த்தி மது குடித்து விட்டு கோமதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனால் மனவேதனை அடைந்த கோமதி கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மாமியார் வீட்டிற்கு சென்ற மூர்த்தி அங்கு, மனைவியை சந்தித்து இனி மது குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு அங்கேயே தங்கினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து மதுபோதையில் மூர்த்தி மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் கோமதியை உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது. இதற்கு கோமதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி கோபத்தில் கோமதியை தாக்கியதோடு, கத்தியை எடுத்து கோமதியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் கோமதியின் உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதன்காரணமாக கோமதி வலியால் அலறி துடித்தார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு கோமதியின் தாய் ஜோதி(52) அங்கு வந்து மூர்த்தியை தடுக்க முயன்றுள்ளார். அப்போது ஜோதியையும் மூர்த்தி தாக்கி, அவரையும் கத்தியால் குத்தினார். இந்த கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த கோமதி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து மூர்த்தி அங்கிருந்து வெளியேறி திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்குள்ள போலீசாரிடம், தனது மனைவியை கொலை செய்து விட்டதாக மூர்த்தி தெரிவித்து போலீசாரிடம் சரணடைந்துள்ளார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த கோமதியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காயங்களுடன் இருந்த ஜோதியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். குடும்பத் தகராறு காரணமாக கணவரே மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com