குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி குத்திக்கொலை தம்பி கைது

சிறுகனூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த அவருடைய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி குத்திக்கொலை தம்பி கைது
Published on

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதூர் உத்தமனூர் சென்னமரச்சோலை பகுதியை சேர்ந்த சவேரியார் மகன்கள் இமானுவேல்(வயது 45), சாலமன்(42). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இமானுவேலுக்கு திருமணமாகி ஜெபமாலைமேரி(40) என்ற மனைவியும், லென்சியா(22), திரிவிசா(16) என்ற மகள்களும், ராஜ்குமார்(19) என்ற மகனும் உள்ளனர். இதில் முதல் மகளான லென்சியா திருமணமாகி சனமங்கலத்தில் உள்ளார். மகன் ராஜ்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகளான திரிவிசா திருச்சி தென்னூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார்.சாலமனுக்கு திருமணம் ஆகவில்லை. அவர், இமானுவேல் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அண்ணன், தம்பி இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் தினமும் இரவில் மது குடித்துவிட்டு வரும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

குத்திக்கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் இருவரும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த நிலையில், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதை பார்த்த ஜெபமாலைமேரி அவர்கள் இருவரையும் விலக்கி விட முயன்றார். அப்போது சாலமன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து இமானுவேலின் இடுப்புக்கு கீழே சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட ஜெபமாலைமேரி கதறி அழுதார்.

தம்பி கைது

இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஹெட்ரிக் இமானுவேல், சிறுகனூர் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இமானுவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலமனை கைது செய்தனர். இந்த கொலை குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com