

ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் தர்மர் (வயது 40). இவர், மலைப்பகுதிக்கு சென்று தேன் சேகரித்தல், கிழங்கு எடுத்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று மதியம் 12 மணியளவில் ஏத்தக்கோவில் அருகே மலைப்பகுதியில் தேன் சேகரித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென்று பாய்ந்து தர்மரை சரமாரியாக தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அந்த கரடியிடம் இருந்து தப்பி வந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.